
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக விளையாடிய் 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.