
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது என்று பார்த்தால், அது நிச்சயம் இந்தியாவாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் கிரிக்கெட்டில் செலுத்திவரும் ஆதிக்கம் அபாரமானது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் இந்தியாவில் உள்ள மைதானங்களை விட மாறுபட்டதாக இருந்தாலும், சில ஒற்றுமைகளும் உள்ளன. அதனால் இந்திய அணி வீரர்கள் தங்களை சிறப்பாக தயார்படுத்திக்கொள்வார்கள். ஆனால் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர்களைச் சேர்த்து மிகப்பெரும் ரிஸ்கை எடுத்துள்ளதாக தோன்றுகிறது.