
இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடிய இத்தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில், நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2ஆவது அணிக்கான போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர் மட்டும் 101 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை துரத்தி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இதில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு கிட்டும். இல்லையென்றால், முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.