
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய அணிக்கான சவால் நிறைந்த போட்டி இன்னும் வரவில்லை என்று நான் கூறுவேன்.
இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டி சிறிது சவாலனதாக இருந்தது. ஆனால், இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எப்போதும் கடினம். சொந்த மண்ணில் அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.