
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வந்தாலும், இந்தாண்டு சீசனானது முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமான ஒரு தொடராகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை, இந்த சீசனில் இதுவரை 6 முறை ஐபிஎல் அணிகள் கடந்துள்ளதே சாட்சி.
அந்தவகையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியும் பேட்டர்களுக்கு சாதகமான ஒரு போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த முதல் அணி எனும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் தகர்க்கப்பட்ட மற்றும் படைக்கப்பட்ட சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் இந்த போட்டியில் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி 259 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை தற்போது பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.