ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும், ஜோஷ் இங்கில் 38, நெஹால் வதேரா 48 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியைக் கைவிடாத ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.24 லட்சமும், அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.30 லட்சமும், அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்கள் அனைவருக்கும் ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாகவும், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாம் முறையாக இந்த அபராதத்தைப் பெற்றுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
இதற்கு முன் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸின் ரியான் பராக், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும், ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூருவின் ரஜத் படிதாருக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸின் அக்ஸர் பாடேல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ரிஷப் பந்த் அகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக பிசிசிஐ அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now