ஐபிஎல் 2025: ஜித்தேஷ் சர்மா அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மார்ஷ் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மிட்செல் மார்ஷுடன் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிலும் குறிப்பாக இந்த சீசன் முழுவது பேட்டிங்கில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த அவர் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பினார்.
இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். இதனால் ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்ற அறியாமல் தடுமாறினர். அதன்பின் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்த கையோடு மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டா ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடு அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித்தள்ளினர். மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த நிலையில் பில் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதார் 14 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்கம் ஆர்சிபி அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. அதன்பின் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் ஜித்தேஷ் சர்மா 21 ரன்களில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 85 ரன்களையும், மயங்க் அகர்வால் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now