
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலானா ஆர்சிபி அணி பலப்பரீட்சை நடத்தியது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் தொடங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கலும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்த்தொடங்கியது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதாரும் அதிரடியில் மிரட்ட ஸ்கோரும் உயர்ந்தது. பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார்.