
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய அக்ஸர் படேல், “டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம், என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன்.