
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் அமைந்துள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் ஃபீல்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்சின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 193 ரண்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது . சிறப்பாக விளையாடிய மேயர்ஸ் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.