
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். மேற்கொண்டு எதிர்வரும் பார்பர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வரவிருக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு முழு ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக துலீப் கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது பும்ரா தொடர்பான மோசமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவை விளையாடவைத்து, அதன் பின்னர் அவர் நியூசிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் ஓய்வளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் சுழற்றுவதன் மூலம் அவர்களை பயன்படுத்த பிசிசிஐ விரும்புகிறது.
இதனால்தான் பும்ராவின் பணிச்சுமை குறித்து இப்போதிலிருந்தே திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் பணிச்சுமையையும் பிசிசிஐ கண்காணித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி களத்தில் இருந்து விலகி இருந்த போதிலும், தற்போது அவர் களம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மறுபுறம், முகமது சிராஜ் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இதன் காரணமாக வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான சொந்த டெஸ்ட் தொடரின் போதும் அவருக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.