
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 263 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி, 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 127 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.