சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 21ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமக ரூதர்ஃபோர்ட் 70 ரன்களையும், குடகேஷ் மோட்டி 63 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் 64 ரன்களையும், பென் டக்கெட் 58 ரன்களையும், ஜோ ரூட் 44 ரன்களையும், ஜோஸ் பட்லர் 41 ரன்களையும் சேர்க்க, 29.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 44 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். ரூட் இப்போது மூன்று வடிவங்களிலும் சேர்த்து 365 போட்டிகளில் 478 இன்னிங்ஸ்களில் விளையாடி 21,025 ரன்களை எடுத்துள்ளார்.
இது தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்தர்பாலையும் முந்தி ஜோ ரூட் தற்போது 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக ஷிவ்நரைன் சந்தர்பால் 454 போட்டிகளில் 553 இன்னிங்ஸ்களில் விளையாடி 20,988 ரன்களை எடுத்த நிலையில் தற்போது ஜோ ரூட் 365 போட்டிகளில் 478 இன்னிங்ஸ்களில் விளையாடி 21,025 ரன்களைச் சேர்த்து முன்னிலைப் பெற்றுள்ளார். .
Also Read: LIVE Cricket Score
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவரைத்தொடர்ந்து இலங்கையின் குமார் சங்கக்காரா, இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே, தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இந்தியாவின் ராகுல் டிராவிட், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா மற்றும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகியோர் மட்டுமே ஜோ ரூட்டிற்கு முன்னாள் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now