
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடங்குகிறது. இந்தாண்டு, ஒருநாள் உலகக்கோப்பை 5தொடர் நடைபெறுவதால் இம்முறை ஆசிய கோப்பைத் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடத்தப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியை தயார் செய்வதற்கு இந்த தொடர் மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்பதை தீர்மானிக்க இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த இரண்டு முக்கிய வீரர்கள் தற்போது உடல் தகுதியை பெற்றிருக்கிறார்கள். அதன்படி கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ள இவ்விருவரும் தீவிர உடல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் . ஆசியக் கோப்பை க்கு இன்னும் 45 நாட்களுக்கு மேல் இருப்பதால் இவ்விருவரும் அணிக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.