
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கௌகாதியில் துவங்கி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைக் குவித்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா 0, ரூசோவ் 0 ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து ஐடன் மார்க்கரம் 33 அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து டி காக், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து டெத் ஓவர்களில் 11,26,20 என மொத்தம் 18 பந்துகளில் 57 ரன்களை குவித்து மிரள வைத்தனர். 17ஆவது ஓவரில் தீபக் சஹார் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால்தான், இந்தியா தப்பித்தது. இறுதியில் தென்னாப்பிரக்க அணி 20 ஓவர்களில் 221/3 ரன்களை குவித்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டி காக் 69, மில்லர் 106 இருவரும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.