
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் நாளை டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் குறித்தும், அணி மாற்றங்கள் குறித்தும் பெரிதான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் வெளியேறி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் உள்ளே வர வாய்ப்புள்ளது. ஆனால் யாரை வெளியேற்றுவார்கள் என்பது கொஞ்சம் குழப்பமே.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணியின் அணுகுமுறை பற்றி பேசும் பொழுது, “ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லியில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்தவித சவாலையும் தராமல் முதல் போட்டியில் அடங்கியதைப் பார்க்க எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டார்கள். ஆஸ்திரேலியா இறங்கி சண்டை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடரை முழுமையாக இழக்கும் ஆபத்து உள்ளது” என்று கூறியிருக்கிறார்.