
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு நேற்றைய தினம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்றனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.125 கோடி பரிசுத்தொகைக்கான காணொளியையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கினார்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மும்பைச் சேர்ந்த ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் விநாயகர் சிலையை வீரர்களுக்கு பரிசாக அளித்தார். மேற்கொண்டு இந்திய அணியை திறம்பட வழிநடத்திய ரோஹித் சர்மாவிற்கு சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சிலையை சிறப்பு பரிசாக அளித்து கவுரவித்தார்.