
இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமை குஜராத் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக அவர் டெல்லியில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது. அதே சமயத்தில் மிக முக்கியமான போட்டியான அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கில் விளையாடுவாரா? மாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பு விளையாட்டு மட்டத்தில் மிக அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் அவருக்கு குஜராத் அகமதாபாத் மைதானம் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானம் ஆகும். இது மட்டும் இல்லாமல் அவர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சர்வதேச போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடி சதங்களை குவித்துள்ளார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் மற்றும் அணி ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.