
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாளுக்குள் சுருண்டு படுதோல்வி அடைந்தது. டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் 6 பேர் முட்டிப்போட்டு பந்தை அடிக்க (ஸ்வீப் ஷாட்) முயற்சித்து ஆட்டமிழந்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் தடுமாற்றம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா விளையாடவில்லை. இது தான் மிகமிகப் பெரிய தவறு.
இங்குள்ள சூழலில் பழக்கப்படுத்திக் கொள்ள குறைந்தது ஒரு பயிற்சி ஆட்டத்திலாவது (ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்த முறை பயிற்சி ஆட்டம் வேண்டாம் என்று கூறி விட்டது) விளையாடி இருக்க வேண்டும். 2ஆவது டெஸ்டில் வீரர்களின் ஷாட்டுகள் சரியில்லை. நீங்கள் உங்களது இன்னிங்சை தொடங்கும் போது, பந்தை 'ஸ்வீப் ஷாட்' வகையில் அடிப்பதற்கு உகந்த சூழலாக இருக்காது. இதே போல் களம் இறங்கிய உடனே சுழற்பந்து வீச்சில் ஒரு போதும் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட்டுகள் அடிக்கக்கூடாது.