
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதனால் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி நிச்சயமாக 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுடன் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிகளுக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடிய முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 545 ரன்கள் குவித்துள்ள அவர், தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
ஆனால் அப்போட்டியில் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி கடைசியில் அணிக்காக அதிரடியாக விளையாடாமல் மிகவும் மெதுவாக விளையாடி சிங்கிள் எடுத்து சுயநலமாக தன்னுடைய சதத்தை தொட்டதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் விமர்சித்தார். குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் கடந்த 3 போட்டிகளாக விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக தெரிவித்த அவர் ரோஹித் சர்மா மட்டுமே தன்னலமின்றி விளையாடியதாக கூறினார்.