
பிஎஸ்எல் தொடரின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 75 (58) ரன்கள் எடுத்த நிலையில் அதை சேசிங் செய்த இஸ்லாமாபாத் 14.5 ஓவரிலேயே அதிரடியாக செயல்பட்டு 159/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பாபர் அசாமை தவிர்த்து எஞ்சிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க வீரராக களமிறங்கி நன்கு செட்டிலாகி 58 பந்துகள் அதாவது கிட்டத்தட்ட 10 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று பிட்ச் மற்றும் எதிரணியின் பவுலங்கை பற்றி நன்கு தெரிந்தும் கடைசி வரை அதிரடியாக விளையாடாத பாபர் அசாம் கடைசி வரை அவுட்டாகாமல் சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாகவே இதே போல தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடாமல் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அதனால் கேப்டனாக அணியின் நலனுக்காக உங்களது ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு மிடில் ஆர்டரில் விளையாடுமாறு வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் விடுத்த ஆலோசனையை மதிக்காத அவர் தொடர்ந்து இப்படி சுயநலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பொல்லார்ட் போல அதிரடியாக விளையாடும் திறமை இல்லாத நீங்கள் எப்படி பீல்டர்களின் இடைவெளியை கண்டறிந்து கடைசி நேரங்களில் 15 – 20 அடிக்கலாம் என்ற யுக்தியை இந்தியாவின் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு பாபர் அசாமை முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.