
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில் கம்பீருடன் இணைந்த விராட் கோலி முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் தில்சானின் அபாரமான கேட்ச்சால் அவுட்டான விராட் கோலியை தொடர்ந்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய தோனி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 ரன்களை விளாசி மறக்க முடியாத சிக்சருடன் கோப்பையை வெல்ல உதவினார். சொல்லப்போனால் அத்தொடரில் ஆரம்பம் முதலே சுமாரான ஃபார்மில் தடுமாறி வந்த அவர் தொடர் நாயகனாக அசத்திய யுவராஜ் சிங்கிற்க்கு பதிலாக பேட்டிங் செய்ய வந்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
இருப்பினும் முரளிதரனை சிறப்பாக எதிர்கொள்ள யுவராஜ் தடுமாறுவார் என்பதால் தோனி களமிறங்கியதாக கடந்த காலங்களில் நிறைய செய்திகள் வெளி வந்தன. இந்நிலையில் அப்போட்டியில் வலது – இடது கை பேட்ஸ்மேன்கள் கலவை வேண்டும் என்பதற்காக கம்பீர் அவுட்டானால் தாமும் விராட் அவுட்டானால் நீங்களும் களமிறங்கலாம் என்று தோனியுடன் பேசி முடிவெடுத்திருப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.