
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்துடன் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் நியூசிலாந்து எளிதான வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
அந்த சூழ்நிலையில் தொடரின் முக்கியமான வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அதில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்க வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு தன்சிட் ஹசன் 5, ஜாகிர் ஹசன் 1 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து வந்த ஹ்ரிடாய் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 35/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற வங்கதேசத்திற்கு நட்சத்திர அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் 18 ரன்கள் எடுத்து நிதானத்தை காட்டிய அவர் லாக்கி ஃபெர்குசன் வீசிய 16ஆவது ஓவரின் முதல் பந்தை பொறுமையாக எதிர்கொண்டார்.