
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. மேலும் அணி உரிமையாளர்களுக்கான கூட்டமும் நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. கடந்த முறை மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த சிஎஸ்கே அணி இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது.
இதையடுத்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இறங்கிவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதேசமயம் அணியின் முன்னாள் கேப்டனும், 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.