
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இது மகேந்திர சிங் தோனியின் 400ஆவது டி20 போட்டியாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 400+ போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன்பின் அவர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் உள்பட மொத்தமாக 400 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ளார். இதில் அவர் 24 அரைசதங்களுடன் 7566 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.