
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்
இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை போராடிய மஹ்முதுல்லா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.