
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் தடுமாறிய அணியை புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தூக்கி நிறுத்தினர்.
ஆனால் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரே ரன்னுக்கு வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். வங்கதேச அணியின் ஸ்பின்னர் தாய்ஜுல் இஸ்லாம் வீசிய பந்தில் எதிர்பார்க்காத விதமாக எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். தான் எப்படி அவுட்டானோம் என புரியாமல் குழம்பிய கோலி, டி.ஆர்.எஸ் முடிவை எடுத்தும் அது பலனளிக்காமல் போனது. இதனையடுத்து பெவிலியன் திரும்பியவுடன் தான் அவுட்டான முறையை பார்த்து அவரே அதிருப்தியடைந்துள்ளார்.
இந்நிலையில் அந்த அதிருப்தியின் காரணமாக விராட் கோலி செய்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, அதை பார்க்காமல், நேராக சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அறையில் இருந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சௌரஃப் குமாரை தன்னுடன் வா என அழைத்துச்சென்ற அவர், முடிந்தால் அவுட்டாகி காட்டு எனக்கூறி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்துள்ளார்.