
விராட் கோலி 2020 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பேட்டிங்கில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். அப்போது பல்வேறு ரசிகர்களும் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் விராட்கோலி கலந்து கொண்டார். அதில் அவர் தோனியுடனான தனது நெருக்கம் பற்றி பேசினார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, “நான் என் கிரிக்கெட் பயணத்தில் ஒரு வித்தியாசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளேன். இந்த காலக்கட்டத்தில் எனக்கு எப்போதும் வலிமையின் ஊற்றாக இருக்கிறார் அனுஷ்கா. அவர் என்னை கூர்ந்து கவனித்து வருகிறார். நான் எதிர்கொண்டுள்ள சூழலை அவர் அறிவார். அனுஷ்கா, என் குடும்பத்தினர், எனது பயிற்சியாளர் தவிர என்னை உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே.
தோனியை அவ்வளவு சீக்கிரம் தொடர்புகொண்டுவிட முடியாது. அவர் போனுக்கு அழைத்தால் 99 சதவீதம் அவர் அதை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் போனை பார்ப்பதே அரிது. ஒரு முறை அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் வலிமையானவராக இருக்கும் போதும். வலிமையானவர் என்று பிறரால் அறியப்படும்போதும் உங்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூட எல்லோரும் மறந்துவிடுவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.