உலகக்கோப்பை 2011: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்? மனம் திறந்த பாடி அப்டான்!
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் தோனி களமிறங்கியது குறித்த முழு கதையையும், அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் கூறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மும்பை வான்கடேவில் நடந்த இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கோப்பையை வென்ற தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள்.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Trending
அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் 3ஆவது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி களத்திற்கு சென்றார். அந்த உலக கோப்பை முழுக்க யுவராஜ் சிங் அபாரமாக ஆடினார். ஆனால் தோனியோ இறுதிப்போட்டிக்கு முந்தைய ஒரு போட்டியில் கூட நன்றாக ஆடவில்லை.
அப்படியிருக்கையில், நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜை அனுப்பாமல், நெருக்கடியான சூழலில் தோனி இறங்கியது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நெருக்கடியான சூழலை நிதானமாக கையாண்டு 91 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
இலங்கைக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் கோலி ஆட்டமிழந்த பின்னர் யுவராஜ் சிங்கை இறக்காமல் தோனி களமிறங்கியது இன்றுவரை பரபரப்பாக பேசப்படுகிறது. யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது யாருடைய முடிவு என்பது குறித்து இன்றும் பேசப்படும் நிலையில், அதுகுறித்து அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக இருந்த பாடி அப்டான், எழுதிய கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து எழுதியுள்ள பாடி அப்டான், “போட்டி நடந்துகொண்டிருக்கும்போது தோனி எப்போதும் வெளியே உட்கார விரும்பமாட்டார்; டிரெஸிங் ரூமில் தான் இருப்பார். 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி நடக்கும்போதும் டிரெஸிங் ரூமில் தான் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் முழுக்க கண்ணாடியால் நிறைந்த முன்னறைக்கு பின்னால் அவர் இருந்தார். நானும் கேரி கிறிஸ்டனும் வெளியே அமர்ந்திருந்தோம். அந்த கண்ணாடி கதவை தட்டிய தோனி, அடுத்து பேட்டிங் ஆட நான் செல்கிறேன் என்று கேரி கிறிஸ்டனிடம் செய்கையால் தெரிவித்தார்.
தோனிக்கு கேரி கிறிஸ்டனுக்கும் இடையே எந்த உரையாடலும் நிகழவில்லை. தோனி முடிவெடுத்து கேரியிடம் கூறினார். தான் முன்னின்று ஆடி போட்டியை முடித்துக்கொடுக்க வேண்டிய தருணம் இது என்று உணர்ந்த தோனி அந்த முடிவை எடுத்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் போட்டிகளை முடித்து கொடுப்பது என்பது தோனிக்கு கை வந்த கலை.
இறுதிப்போட்டிக்கு முந்தைய 8 போட்டிகளிலும் தோனி சரியாக ஆடவில்லை. ஆனால் யுவராஜ் நன்றாக ஆடியிருந்தார். ஆனாலும் இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன் களமிறங்கி போட்டியை முடித்து கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now