
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது.
மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் தொடங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் ஷஃபிக் 8, ஷான் மசூத் 30, அசார் அலி 45, ஷாகீல் 23, முகமத் ரிஸ்வான் 19 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும் ஆகா சல்மான் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, பென் டன்கட் 26, ஜோ ரூட் 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.