ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி, காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
![Pakistan Trio Fined For Breaching ICC Code Of Conduct Against SA ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிப்பு!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Pakistan-Trio-Fined-For-Breaching-ICC-Code-Of-Conduct-Against-SA-mdl.jpg)
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆனால் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் ஆக்ரோஷமான செயல்பாடுகளின் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது அதற்காக ஐசிசியின் நடவடிக்கைக்கும் உள்ளாகியுள்ளனர்.
Trending
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாஹீன் அஃப்ரிடி, சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தென் அப்பிரிக்க அணி வீரர் மேத்யூ பிரீட்ஸ்கியிடம் மோதல் போக்கை கடைபிடித்ததன் காரணமாக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக பெற்றுள்ளார்.
அதேசமயம் சௌத் ஷகீல் மற்றும் கம்ரன் குலாம் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடும் வகையில் அவரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை அடுத்து, அவர்கள் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேற்கொண்டு இவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, மேற்கொண்ட வீசாரனைக்கு ஆஜராக தேவையில்லை என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப்ரவரி 14) நடைபெறும் நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now