
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்த முயற்சித்தனர். அச்சமயத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்த நிலையில் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது.
அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் பந்துவீசிய நிலையிலும் விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.