
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. எல்லா போட்டிகளுமே எங்களுக்கு அழுத்தமாகத்தான் இருந்தது. உலகக்கோப்பை என்றில்லை. இந்தியாவில் இருதரப்பு தொடரில் ஆடினாலும் அதிலும் வெல்ல வேண்டும் என்கிற அழுத்தம் இருக்கவே செய்யும். வெளியே இருக்கும் எல்லாருமே நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதையும் வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.