
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேற்கொண்டு எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அத்தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று அதிகாரப்பூர்மாக உறுதிசெய்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.