
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணியும், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அஃப்ரிடி மற்றும் லசித் மலிங்கா ஆகியோரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரஷித் கான் 37 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.