
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017லிருந்து இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்தாண்டு முடிந்த நிலையில், அதன்பின்னர் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு அடுத்த தலைமுறை திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி கொடுத்தார். அண்டர் 19 உலக கோப்பையை 2018இல் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். எனவே இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றதும், அவரது பயிற்சியில் இந்திய அணியிடமிருந்து பெரிதாக எதிர்பார்கப்பட்டது.
ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உள்ளிட்ட பெரிய தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஏமாற்றமளித்தது. டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் விளையாடும் லெவன் காம்பினேஷனே சரியில்லை என்பது குற்றச்சாட்டு. யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைக்காதது, தொடக்கத்திலிருந்தே ரிஷப் பந்தை ஒதுக்கியது, வீரர்களின் ரோலில் தெளிவில்லாததும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.