
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தனிபட்ட காரணங்களால் பங்கேற்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இங்குள்ள மிகப்பெரும் கேள்வி யாதெனில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் அவருக்கான மாற்று தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்சமயம் அதிகரித்துள்ளது. ஏனெனில் அணியின் மாற்று தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் அபிமன்யூஸ் ஈஸ்வரன் மற்றும் அனுபவம் வாய்ந்த கேஎல் ராகுல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், இதில் யார் அணியின் தொடக்க வீரர் என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.