
தற்போதைய உலக கிரிக்கெட்டில் நடந்து வரும் அனைத்து விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய, நடப்பில் விளையாடும் ஒரே வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு என்பது மேலும் கீழும் சென்று கொண்டே இருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம், அவர் தன்னை நிரூபித்து, அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தித் தந்து, வெற்றியைக் கொண்டு வரக்கூடியவராக இருக்கிறார்.
அதே சமயத்தில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருந்தும், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவராக, எப்பொழுதும் அதை கடந்து செல்பவராக இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை கிரிக்கெட் குறித்தும் அந்தந்த போட்டி குறித்தும் ஆடுகளங்கள் குறித்தும் மிகத் தெளிவான பார்வையை கொண்டிருக்க கூடிய ஒரு புத்திசாலித்தனமான வீரராகவே பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக ” முன்பு இந்திய அணியில் வீரர்கள் நண்பர்களாக இருந்தார்கள், தற்பொழுது நண்பர்களாக இல்லை வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். அப்போது அவரது கருத்து பெரிய சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியது. அணிக்குள் சூழ்நிலை சரியில்லை என்று பேசப்பட்டது.