Advertisement

டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!

விராட் கோலி என்னிடம் டெத் ஓவர்களில் இந்தியாவின் மிகவும் அபாயகரமான கேப்டன் யார் என்று தெரியுமா? என கேட்டார் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2023 • 14:21 PM
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக இலங்கை எதிரான போட்டியில் 53 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றினார்.

Trending


மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் (264), 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் போன்ற நிறைய உலக சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டில் நாயகனாகவே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பொதுவாகவே டெத் ஓவர்களில் எதிரணி பவுலர்களை தெறிக்க விடும் இந்திய கேப்டன் என்றால் அது எம்எஸ் தோனியாக பார்க்கப்படுகிறார்.

ஆனால் ஆரம்ப காலங்களில் மிடில் ஆடரில் விளையாடிய போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும், இந்தியாவுக்காக இரட்டை சதங்கள் போன்ற பெரிய ரன்கள் அடித்த போட்டிகளிலும் கடைசி நேரத்தில் பவுலர்கள் எப்படி போட்டாலும் அடிக்கும் திறமை கொண்ட ரோஹித் சர்மா தான் டெத் ஓவரில் அபாயகரமான இந்திய கேப்டன் என்று ஒருமுறை விராட் கோலி பாராட்டியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 5 – 6 வருடங்களுக்கு முன்பாக ஒருமுறை நான் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பற்றி விராட் கோலியிடம் பேசினேன். போட்டியை பற்றி எனக்கு நினைவில்லை. அப்போட்டியில் அவருடைய ஆட்டத்தை பார்த்த நான் இவருக்கு எப்படி தான் பந்து வீசுவது? என்று நினைத்தேன். குறிப்பாக கடைசி 15 – 20 ஓவர்களில் அவருக்கு எங்கு பந்து வீசுவது என்பது உங்களுக்கு தெரியாது. அப்போது விராட் கோலி என்னிடம் டெத் ஓவர்களில் இந்தியாவின் மிகவும் அபாயகரமான கேப்டன் யார் என்று தெரியுமா? என கேட்டார்.

அதற்கு நான் தோனியா? என்று கூறினேன். ஆனால் அதற்கு இல்லை அது ரோஹித் என்று விராட் கோலி சொன்னார். ஏனெனில் ஒரு டி20 போட்டியில் 16ஆவது ஓவர்களுக்கு மேல் நின்றால் அவருக்கு எந்த மாதிரியான பந்தை வீசுவது என்பது உங்களுக்கு தெரியாது. காரணம் அவரிடம் அனைத்து வகையான ஷாட்டுகளும் இருக்கிறது. அந்த வகையில் சின்னசாமி மைதானத்தில் அவர் விளையாடிய ஆட்டத்தை விராட் கோலி மறக்கவில்லை என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement