
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது. ராகுல் (20), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார் யாதவ்(8), கேஎஸ் பரத் (8) ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார்.
ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து விளையாடிவருகின்றனர். இதனால் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டாட் மர்ஃபி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.