
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.இதனால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது.
இதனால் அப்போட்டிக்கான இந்திய அணியை அணியின் துணைக்கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.