
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலபப்ரீட்சை நடத்தி வருகிறது. கயானாவில் மழை அச்சுறுத்தலுக்கு மத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச தீர்மானித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்க, மறுபக்கம் விராட் கோலியும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி நிச்சயம் பெரிய ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிக்ஸர் அடித்த அதே ஓவரில் மீண்டும் அடிக்க முயன்று க்ளீன் போல்டாகியதுடன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் காரணமாக இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.