
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. குறிப்பாக ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் அதிரடியாக விளையாடிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 94, ஸ்டீவ் ஸ்மித் 74, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் குவிக்க உதவினர்.
இருப்பினும் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இதை தொடர்ந்து 353 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அதில் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமாகவே செயல்பட்டு நிலையில் மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஸ்டைலில் விளையாடிய ரோஹித் சர்மா மளமளவென ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட்க்கு எதிராக தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த அவர் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ்க்கு எதிராக 2 சிக்ஸர்களை அடித்து மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவாகவே ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய 3 வீரர்களை கொண்டிருப்பதால் ஆஸ்திரேலியா உலகிலேயே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு அட்டாக்கை கொண்ட அணியாக வல்லுனர்களாலும் முன்னாள் வீரர்களாலும் போற்றப்படுகிறது.