
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இவ்விரு அணிகள் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் இரு அணிகளிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, டீ காக், க்ளாஸென், டேவிட் மில்லர், பும்ரா என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.இதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா வழக்கம் போல தம்மைப் பற்றி கவலைப்படாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை அடித்து நொறுக்கி அபாரமான துவக்கத்தை கொடுக்க முயற்சித்தார்.