-mdl.jpg)
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 10 ரன்களுக்கு மேல் எடுக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவர் பிளேயிங் லெவனில் இருந்து விலகினார்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என்பதை ரோஹித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியின் போதே செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார்.