
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 4 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணி 17 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்து மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 20 ரன்களில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, 17 ரன்களை எடுத்த கையோடு விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.