
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு மறுபக்கபட்டு ரிஷப் பந்த், ரியான் பராக், ஷிவம் தூபே போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. மேற்கொண்டு கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.