
தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது இன்று (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஏனெனில் அணியின் தொடக்க வீரர் ரஸ்ஸி வேன்டர் டுசென் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கியும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹெண்ட்ரிக்ஸும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் கேப்டன் ஹென்றிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் ஹென்ரிச் கிளாசென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த் நிலையில், மறுபக்கம் டேவிட் மில்லர் சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 12 ரன்களில் கிளாசென் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.