தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் விளையாடாத நிலையில் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடக்க வீரராக களமிறங்கினார்.
அனால் முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் அரைசதம் கடந்ததுடன் 58 ரன்களையும், முகமது ரிஸ்வான் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.