Advertisement

கேப்டன் பொறுப்பிற்கு தோனியை பரிந்துரைத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!

புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிரணியை மிஞ்சும் திறமையும் அமைதியாக செயல்படும் தன்மையும் 2004இல் அறிமுகமான தோனியிடம் இருந்ததை கவனித்ததால் அவரை கேப்டன்ஷிப் பதவிக்கு பரிந்துரை செய்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 23, 2022 • 11:56 AM
Sachin Tendulkar On MS Dhoni's Captaincy Qualities!
Sachin Tendulkar On MS Dhoni's Captaincy Qualities! (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை உருவாக்கினார். அதை விட 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.

அத்துடன் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை தணித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்தார். அதனால் வரலாற்றில் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

Trending


அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2ஆவது வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கும் அவர் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் உட்பட இதர இந்திய ஜாம்பவான் கேப்டன்களை மிஞ்சியுள்ளார். அப்படிப்பட்ட மகத்தான அவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற போது அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவராக இருந்தார்.

முன்னதாக 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் படுதோல்வியை சந்தித்த காரணத்தால் சச்சின், ட்ராவிட், கங்குலி போன்ற சீனியர்கள் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களுக்கு வழி விட்டு வாய்ப்பு கொடுத்தனர். குறிப்பாக அணியின் முதுகெலும்பு நம்பிக்கை நட்சத்திர வீரர் என்ற வகையில் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று சச்சின் டெண்டுல்கரிடம் பிசிசிஐ கேட்ட போது 26 வயதான எம்எஸ் தோனியை அவர் பரிந்துரை செய்தார்.

அதன்பின் இந்திய கிரிக்கெட்டின் வரலாறு மாறிய நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிரணியை மிஞ்சும் திறமையும் அமைதியாக செயல்படும் தன்மையும் 2004இல் அறிமுகமான தோனியிடம் இருந்ததை கவனித்ததால் அவரை கேப்டன்ஷிப் பதவிக்கு பரிந்துரை செய்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இது இங்கிலாந்தில் நாங்கள் இருந்த சமயத்தில் எனக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வந்த போது நடந்ததாகும். அப்போது நான் நமது அணியில் ஒரு நல்ல இளம் தலைவர் இருப்பதால் அவரைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அவரிடம் (தோனி) நான் நிறைய பேசியுள்ளேன். குறிப்பாக களத்தில் இருக்கும் போது முதல் ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த சூழ்நிலைகளில் நீங்கள் கேப்டனாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்பது போல் அவரிடம் நிறைய பேசியுள்ளேன். அந்த சமயத்தில் ராகுல் டிராவிட் நல்ல கேப்டனாக இருந்தாலும் அவரிடம் பேசி கேப்டன்ஷிப் பற்றி நிறைய கேட்டேன். அதில் அவரிடமிருந்து எனக்கு கிடைத்த கருத்துக்கள் மிகவும் சமநிலையாக அமைதியாக முதிர்ச்சடைந்ததாக இருந்தது.

நல்ல கேப்டன்ஷிப் என்பது எதிரணியை விட ஒரு படி மேலே இருப்பதாகும். ஒருவர் அதை புத்திசாலித்தனமாக செய்யும் போது வெறித்தனமாக விளையாடுகிறார் என்பதை விட புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என்று சொல்வோம். மேலும் உங்களுக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்பட்டால் அதை அடுத்த 10 பந்துகளில் எடுக்க முடியும் என்பது உடனடியாக நடந்து விடாது. அதற்கு நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும். ஏனெனில் போட்டியின் முடிவில் ஸ்கோர் போர்டு மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் அதை கட்டுப்படுத்தும் குணத்தை அவரிடம் கண்டேன். அதனால் தான் அவரது பெயரை பரிந்துரைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement